பக்கம் எண் :

184கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

பிழைப்பதிலே சிலர்க்கின்பம்; பொய்ம்மை பேசிப்
      பிறர்நலத்தில் அழுக்குற்றுப் புறுமுங் கூறிச்
செழிப்பதிலே சிலர்க்கின்பம்; வறுமைப் போதும்
      செம்மைநெறி குன்றாமை சிலருக் கின்பம்.

பாடுபட்டுப் பெற்றோர்கள் கல்விக் காகப்
      பணமனுப்பச் செலவழித்துக் கூடிப் பாடிக்
கூடுவிட்ட பறவைஎன ஒடி ஆடிக்
      கோலங்கள் பலசெய்து, வாங்கி வைத்த
ஏடுதொட்டுப் பாராமல், கண்வி ழித்தே
      எக்களித்துத் திரிவதிலே சிலருக் கின்பம்;
நாடுகெட்ட நிலையுணர்ந்து, தமைநி னைந்து
      நடப்பதற்கு முயல்வதுதான் நிலைத்த இன்பம்

நமதுதொழில் பயில்வதெனக் கடமை எண்ணி
      நாட்டுக்கும் வீட்டுக்கும் நலம்வி ளைக்க
உமதறிவு, செயல், நினைவை ஆக்கல் வேண்டும்;
      உலகும்மைத் தக்கவரென் றுரைக்கும் வண்ணம்
நுமதுடைமை கண்ணியமென் றெண்ணி எண்ணி
      நொடிப்பொழுதும் வழுவாமல் ஒழுகல் வேண்டும்;
குமையாமல் சிதையாமல் கட்டுப் பாடும்
      கொண்டவராய் விளங்குவிரேல் இன்பந் தோன்றும்.

தொடங்குங்கால் துன்பமெனத் தோன்று மேனும்
      துளங்காமல் தொடர்ந்திருந்து முயல்வீ ராயின்
மடங்கொன்று பேரறிவு வளரக் காண்பீர்;
      மட்டில்லா இன்பநிலை தொடரக் காண்பீர்;
முடங்கியுள நம்நாடு நாளை உங்கள்
      முகங்களைத்தாம் எதிர்நோக்கும்; அதனால் நெஞ்சில்
திடங்கொள்க பயின்றிடுக வெற்றி கொள்க
      திருநாட்டில் நல்லாட்சி மலரச் செய்க.

கருத்தராவுத்தர் கல்லூரி
உத்தம பாளையம்
27.1.1967