மதியாதார் தலைவாசல் மிதிப்ப தற்கு மதிகெட்டு வந்தமொழி மானங் கெட்டுக் கதியேதுங் காணாமல் ஓடித் தோல்வி கண்டபினும் தன்னகத்தே வாழும் எண்ணம் உதியாமல், பிறன்வீட்டிற் புகநினைந்தே உணர்விழந்து மறுமுறையும் அறுபத் தைந்தில் விதியோடு விளையாட உறவும் ஆட வீறுநடை யோடிங்கு நுழையக் கண்டோம். இனிவிடுத்தால் தமிழ்மொழிக்கும் நமக்குந் தீங்காம் எனக்கருதித் தமிழகமே கொதித்தெ ழுந்து முனைமுகத்துத் தலைநிமிர்ந்து நிற்கக் கண்டோம்; மூண்டுவரும் மொழிப்போரில் வாழ்வா சாவா எனநினைத்துத் தமதுயிரைச் சிறிதென் றெண்ணி இனியதமிழ் காப்பதென உறுதி பூண்டு தினவெடுத்த போர்மறவர் திரண்டு நின்று திரும்பிச்செல் திரும்பிச்செல் இந்திப் பெண்ணே என்றுரைத்துக் கனன்றெழுந்து வீரம் மிக்க எம்மினத்தார் அணிவகுத்தார்; இந்தி ஆட்சி கொன்றழித்த பிணக்குவியல் கொஞ்சம் அல்ல; கொடுங்கோன்மை கட்டவிழ்த்துக் கொண்டு சீறி நின்றிழைத்த கொடுமைகளும் கொஞ்ச மல்ல; நெடுந்தவத்தாற் பெற்றெடுத்த பிள்ளை மார்பில் சென்றடித்த குண்டுகளும் கொஞ்ச மல்ல; சிறையகத்துப் பட்டோரும் கொஞ்ச மல்லர்; ஐயிரண்டு திங்களுடல் சுமந்து பெற்ற அரும்புகளை இழந்தமையால் நொந்த தாயர் கையிரண்டும் பிசைந்தழுத கண்ணீர் வெள்ளம் கண்டவர்தம் கல்மனமுங் கரைந்து போகும்; |