பக்கம் எண் :

34கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

நச்சி எழுதல் நமதுகடன் என்றுணர்ந்து
காக்க முனைந்தெழுக! காவா தொழிவீரேல்
போக்க முடியாத புல்லடிமை நேரும்
எழுத்தை இழக்க இசைவீரேல் உங்கள்
கழுத்தைக் கொடுத்துக் கலங்கும் நிலைபெறுவீர்!
ஆண்டாண்டு காலம் அழியாத் தமிழ்மொழிக்கு
வேண்டாதார் இந்த வினையெல்லாம் செய்கின்றார்;
வீரத் தமிழினத்தின் வேரறுக்க மாற்றலர்தாம்
ஈரத் துணியிட்டு நும்கழுத்தை ஈர்கின்றார்;
காட்டிக் கொடுக்கும் கயமைக் குணமிங்கு
நீட்டித் தலைகாட்டி நேய மொழியுரைக்கும்'
வீழ்ந்து சிதையாதீர்! வீணாகிப் போகாதீர்!
தாழ்ந்து பணியாதீர்! தன்மானங் கொண்டெழுவீர்!
எவ்வழியால் உட்புகுவோம் என்றே இருக்கின்றார்
செவ்வியர்போல் பேசுகின்றார் செந்தமிழீர் நீரயர்ந்தால்
அன்றே நுழைவர்; அயரேல்! தமிழ்வாழ
ஒன்றே நினைப்பீர் உளத்து.