பக்கம் எண் :

42கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

17. விடை கொடு தாயே

விடைகொடு விடைகொடு தாயே - சமரில்
      வென்றிடுந் திறமருள் வாயே
உடைமைகள் உயிருடல் நீயே - எங்கள்
      உணர்வினில் உறுந்தமிழ்த் தாயே.

படையுடன் இவண்வரும் இந்தி- பல
      பாடை கொணர்ந்திடும் இந்தி
தடையுடன் புகவரும் இந்தி - பெருந்
      தடிபல கொணர்ந்திடும் இந்தி

படைவரும் தடைவரும் அறிவோம் - அது
      பாதியில் உடைபடும் தெரிவோம்
கொடுமைகள் கண்டுளந் திரியோம் - எமைக்
      கொன்றிடி னுஞ்சமர் புரிவோம்.

அடிபட அடிபட எழுவோம் - எங்கள்
      ஆவி பிரிந்திடின் விழுவோம்
சுடுபடக் கொள்கையில் நழுவோம்- நெஞ்சில்
      துணிவொடு தமிழ்மொழி தொழுவோம்.