சுரங்கள் கேட்டவை தெரிந்தவன் போலக் கையுங் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவையின் ஆட்டுவன் தலையை; பொருளும் ஓரான் உணர்வுங் காணான் மருளன் பிறமொழி இசையில் மயங்கினன்; பழுத்த வளமைப் பைந்தமிழ் மொழியை இழித்தும் பழித்தும் எள்ளி யுரைத்தும் கையொலி பெறுதல் காணுதும் ஈங்கே பொய்யிலை மேடையிற் புகுந்தவர் செயலிது; எள்ளிய மடவனை ஈன்றதாய் யாவள்? தமிழ்மகள் எனினும் தகவிலான் எள்ளினன்; கயவன் மொழியால் கையொலி எழுப்பும் பயனிலா மகனும் பைந்தமிழ் மகனே; யாதுரை புகலினும் பேதைமை நீங்கிலன் வேதனைக் கடலுள் வீழ்ந்ததெம் முளமே; தன்மொழி தாழ்வுறல் கண்டும் தமிழ்மகன் உன்னுதல் செய்யா துறங்குவன் நெடிதே. 23.9.1975 |