பக்கம் எண் :

தாய்மொழிக் காப்போம்57

சுரங்கள் கேட்டவை தெரிந்தவன் போலக்
கையுங் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவையின் ஆட்டுவன் தலையை;
பொருளும் ஓரான் உணர்வுங் காணான்
மருளன் பிறமொழி இசையில் மயங்கினன்;
பழுத்த வளமைப் பைந்தமிழ் மொழியை
இழித்தும் பழித்தும் எள்ளி யுரைத்தும்
கையொலி பெறுதல் காணுதும் ஈங்கே
பொய்யிலை மேடையிற் புகுந்தவர் செயலிது;
எள்ளிய மடவனை ஈன்றதாய் யாவள்?
தமிழ்மகள் எனினும் தகவிலான் எள்ளினன்;
கயவன் மொழியால் கையொலி எழுப்பும்
பயனிலா மகனும் பைந்தமிழ் மகனே;
யாதுரை புகலினும் பேதைமை நீங்கிலன்
வேதனைக் கடலுள் வீழ்ந்ததெம் முளமே;
தன்மொழி தாழ்வுறல் கண்டும் தமிழ்மகன்
உன்னுதல் செய்யா துறங்குவன் நெடிதே.

23.9.1975