58 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
28. தமிழர் போக்கு தமிழ்நாட்டின் சிறப்பனைத்தும் புகல்வ தென்றால் தனிப்பிறவி எடுத்தவர்க்கும் இயலா தாகும்; அமிழ்தூற்றும் தமிழ்க்குறளின் பெருமை சொல்ல ஆயிரம்நா போதுவதோ? போதா வாகும்; தமிழ்காட்டும் பண்பனைத்தும் நாமே சொல்லித் தற்பெருமை கொள்ளவிலை; உலக மெல்லாம் இமைகூட்ட மனமின்றி விழித்து நோக்கி எண்ணரிய வியப்பெய்திப் போற்றக் கண்டோம். ஆனாலும் நாம்மட்டும் அறிந்தோ மல்லோம் அறிந்தாலும் வாய்திறந்து புகழ்ந்தோ மல்லோம் போனாலும் போகட்டும்; மற்றோர் யாரும் புகழ்ந்தாலும் ஒருசிறிதும் பொறுப்ப தில்லை; தானாகக் கதைதிரித்து மறுப்புக் கூறித் தரியலர்போல் இகழ்ந்துரைத்து வாழ்ந்து செல்லும் கூனான மனமுடையார் சிலரும் நம்மில் *குடிலர்களாய் வாழ்கின்றார் உண்மை உண்மை. நல்லுள்ளங் கொண்டவர்தாம் தமிழ்மொ ழிக்கு நன்மைசெய முற்படுங்கால் வாழ்த்தல் வேண்டும்; அல்லுள்ளங் கொண்டவரோ மாறாய்ப் பேசி அவர்திறமைக் கேற்றபடி ஏள னங்கள் சொல்லுவதிங் கியல்பாகக் கொண்டார்; அந்தத் தூயவருந் தமிழினமாம்; பழித்து ரைக்கும் புல்லுள்ளங் கொண்டவர்க்கும் தமிழே தாயாம்; புரியாராய் ஏசுகின்றார் அவர்தம் தாயை.
* குடிலன் - அடுத்துக் கெடுக்கும் ஓர் அமைச்சன். |