பக்கம் எண் :

58கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

28. தமிழர் போக்கு

தமிழ்நாட்டின் சிறப்பனைத்தும் புகல்வ தென்றால்
      தனிப்பிறவி எடுத்தவர்க்கும் இயலா தாகும்;
அமிழ்தூற்றும் தமிழ்க்குறளின் பெருமை சொல்ல
      ஆயிரம்நா போதுவதோ? போதா வாகும்;
தமிழ்காட்டும் பண்பனைத்தும் நாமே சொல்லித்
      தற்பெருமை கொள்ளவிலை; உலக மெல்லாம்
இமைகூட்ட மனமின்றி விழித்து நோக்கி
      எண்ணரிய வியப்பெய்திப் போற்றக் கண்டோம்.

ஆனாலும் நாம்மட்டும் அறிந்தோ மல்லோம்
      அறிந்தாலும் வாய்திறந்து புகழ்ந்தோ மல்லோம்
போனாலும் போகட்டும்; மற்றோர் யாரும்
      புகழ்ந்தாலும் ஒருசிறிதும் பொறுப்ப தில்லை;
தானாகக் கதைதிரித்து மறுப்புக் கூறித்
      தரியலர்போல் இகழ்ந்துரைத்து வாழ்ந்து செல்லும்
கூனான மனமுடையார் சிலரும் நம்மில்
      *குடிலர்களாய் வாழ்கின்றார் உண்மை உண்மை.

நல்லுள்ளங் கொண்டவர்தாம் தமிழ்மொ ழிக்கு
      நன்மைசெய முற்படுங்கால் வாழ்த்தல் வேண்டும்;
அல்லுள்ளங் கொண்டவரோ மாறாய்ப் பேசி
      அவர்திறமைக் கேற்றபடி ஏள னங்கள்
சொல்லுவதிங் கியல்பாகக் கொண்டார்; அந்தத்
      தூயவருந் தமிழினமாம்; பழித்து ரைக்கும்
புல்லுள்ளங் கொண்டவர்க்கும் தமிழே தாயாம்;
      புரியாராய் ஏசுகின்றார் அவர்தம் தாயை.


* குடிலன் - அடுத்துக் கெடுக்கும் ஓர் அமைச்சன்.