பக்கம் எண் :

தாய்மொழிக் காப்போம்59

பேருந்து வண்டிகளிற் குறளைக் கண்டால்
      பேருவகை தமிழ்நெஞ்சிற் பொங்க வேண்டும்;
யாரந்தக் குறளெழுத முனைந்தா ரோஇங்
      கெவர்மனத்துத் தோன்றியதோ என வியந்து
பாரெங்கும் அவர்பெயரை வாழ்த்த வேண்டும்
      பைந்தமிழ்க்கு நற்காலம் வந்த தென்று;
யாரிங்கு வாழ்த்துகின்றார்? பொல்லாங் கன்றோ
      யார்யாரோ புகல்கின்றார் பித்தர் போல;

விரைந்துசெலும் உந்துகளுக் காங்கி லத்தில்
      வைத்திருந்த பெயர்மாற்றித் தமிழில் நன்கு
வரைந்ததிருக் கைகளைநான் வாழ்த்து கின்றேன்
      வளர்தமிழின் வளர்ச்சியிலே விரைவு கண்டே;
விரிந்தமதி யான்உரைத்தான் விரைவு வண்டி
      விறகுவண்டி எனச்செவியில் விழுந்த தென்றே;
திரிந்தவற்குச் செவிபழுதாய் விட்ட தென்றால்
      செந்தமிழைப் பழிப்பதற்கா முயல வேண்டும்?

எங்கெங்குக் காணினுமே தமிழ்தான் என்ற
      இயல்புநிலை இங்குவர வேண்டு மென்று
பொங்குகிறோம்; ஓரிரண்டு நிலையி லேனும்
      பூத்துளதே தமிழென்று மகிழ்கின் றோம்நாம்;
மங்கியவர் எள்ளிநகை யாடு கின்றார்;
      மல்லிகைப்பூ ‘வராகத்தால் நுகர்தல் உண்டோ?
இங்கிவர்தாம் திருந்திவரும் நாள்தான் என்றோ?
      இனியதமிழ் இகழ்வதுவா கட்சி யாகும்?


*முன்னாள் அமைச்சர் பெயர் மறைந்துள்ளது அறிக