பக்கம் எண் :

தாய்மொழிக் காப்போம்65

32. சமயத்தில் நட்டதமிழ்

அருளப்பன் என்னும் பேரான்
      அப்துல்லா வானான் கண்டாய்!
கருப்பணன் என்பான் இங்கே
      கபூரென ஆகி விட்டான்;
விருப்புள பொன்னன் கூட
      விஜயனாய் மாறி விட்டான்;
வெறுப்புற ஜெகந்நாத் தானான்
      வெள்ளையன் அந்தோ அந்தோ!

செல்லப்பன் இயல்பு மாறி
      ஜீவபந்த் தாகி விட்டான்;
நல்லப்பன் கெட்டே போனான்
      நண்ணினான் ஸ்ரீபா லாக;
சொல்லுக்கோர் அழகன் இங்கே
      சொக்கினான் ஜோசப் பானான்;
அல்லலுக் காளாய் நின்றான்
      அந்தோணி யானான் மெய்யர்.

தைத்திங்கள் பிறக்கும் நாளைத்
      தமிழ்மகன் சங்கி ராந்தி
வைத்திங்குக் கூவி நின்றான்;
      வளரிளஞ் சிறுவ ரெல்லாம்
மொய்த்திங்குக் கூடி ஆட
      முயல்மகார்நோன்பை கூடக்
கைத்ததென் றொதுக்கி விட்டான்
      கழறினான் தசரா என்றே.