பக்கம் எண் :

66கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

திருமறைக் காடென் றோதும்
      தீந்தமிழ்ப் பெயரும் செல்ல
வருமொழி வேதா ரண்யம்
      வந்தது; வளங்கள் யாவும்
மருவிடும் தமிழின் அண்ணா
      மலையெனும் பெயரும் மாறி
அருணமும் கிரியு மாகி
      அய்யவோ ஓங்கிற் றம்மா!

தன்பெயர் மாற்றி வைத்தான்;
      தனித்தமிழ் ஊரின் பேரை
என்பயன் கருதி னானோ
      இயம்பினான் வேறு பேரால்;
முன்புள திருநாள் தன்னை
      மொழிந்தனன் பெயரை மாற்றி;
புன்செயல் என்றே எண்ணான்
      பொன்றினான் அடிமைப் பட்டே.

சமயத்தில் தமிழை நட்டான்
      சாய்ந்துமே தளர்ந்த தம்மா!
இமயத்தில் கொடியை நட்டோம்
      என்றெலாம் வீரம் பேசித்
தமிழைத்தான் கோட்டை விட்டான்
      தமிழனென் றொருபேர் கொண்டான்
இமையைத்தான் விழிம றந்தால்
      எப்படிப் புகல்வ தம்மா?

மதமெனும் பேய்பி டித்தே
      மடமையுள் மூழ்கி நின்றான்;
கதவினைத் திறந்து வைத்தான்
      கண்டவை புகுவ தற்கே;
எதனையும் தழுவிக் கொண்டான்
      இவனைத்தான் மறந்தே போனான்;
பதரெனச் சொல்வ தல்லால்
      பகர்ந்திட உவமை ஏது?

27.9.1975