பக்கம் எண் :

தாய்மொழிக் காப்போம்67

33. கோவிலுக்குள் கொடுமை

தருக்கினால் அயலான் வந்து
      தமிழனைப் பழித்துப் பேசும்
வெறுப்புறுங் குற்றஞ் செய்தால்
      விரைந்தவன் முதுகெ லும்பை
நொறுக்கடா என்ற பாடல்
      நுவன்றவன் பிறந்த மண்ணிற்
செருப்பினால் தாக்கப் பட்டான்
      செந்தமிழ் பழித்த வாயன்.

என்னுமோர் சொல்லைக் கேட்டேன்
      இருசெவி குளிரப் பெற்றேன்
வன்முறை நோக்க மன்று
      வழிவழி மரபு மன்று
சொன்முறை யெல்லாஞ் சொல்லித்
      தொலைத்தும்நற் கோவி லுக்குள்
தென்மொழி வேண்டா வென்றால்
      செய்வது வேறென்? சொல்லும்

தாய்மொழி பழித்துப் பேசுந்
      தறுதலை எவனுந் தோன்றின்
பாய்புலி யாவர் எங்கள்
      பைந்தமிழ் மறவர் என்று
கூய்வரும் மொழியைக் கேட்டுக்
      குளிர்ந்ததென் னுள்ள மெல்லாம்;
நாய்களின் வாலைச் சற்று
      நறுக்கித்தான் வைக்க வேண்டும்.