பக்கம் எண் :

68கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

தன்னுடல் வளர்ப்ப தற்குத்
      தமிழையே சொல்லிச் சொல்லிப்
பொன்பொருள் பெருக்கிக் கொண்டான்;
      புல்லியன் நன்றி கொன்றே
தென்மொழி வெறுத்தல் கண்டும்
      திருவிழா நடத்துங் கூத்தர்
பின்னுமேன் அழைக்க வேண்டும்?
      பித்தர்கள் இவர்போ லுண்டோ?

வடமொழி ஒன்றே ஏற்பர்
      வண்டமிழ் ஏலா ரென்றால்
கடவுளர் உருவக் கல்லைக்
      கடலிடை வீச லன்றி
இடமுடைக் கோவி லுக்குள்
      இன்னுமேன் வைத்தல் வேண்டும்?
மடமிகு மதிய ரானீர்
      வந்தவர் ஏறிக் கொண்டார்.

கல்லினைக் கடவு ளாக்கிக்
      கைத்திறன் காட்டுஞ் சிற்பி,
கல்லொடு கல்ல டுக்கிக்
      கோவிலைக் கட்டுங் கொற்றன்,
கல்லினை மண்ணைச் சாந்தைக்
      களத்தினிற் சுமக்குஞ் சிற்றாள்
செல்லவுந் தடையாம் செய்த
      சிலைகளைத் தொட்டால் தீட்டாம்.