பக்கம் எண் :

தாய்மொழிக் காப்போம்69

மாந்தரைத் தடுத்த போது
      மடமையாற் பொறுத்துக் கொண்டீர்
தீந்தமிழ் மொழியை நம்மை
      ஈன்றருள் தாயைத் தீயர்
போந்தவர் தடுக்கும் போதும்
      பொறுமையா காட்டு கின்றீர்?
மாந்தரென் றும்மை யெண்ண
      மனமிகக் கூசு கின்றேன்.

தன்மதிப் பிழந்தீர் வேதர்
      தாளிணை வருடி நின்றீர்
நன்மதி திரிந்து கெட்டீர்
      நால்வகை `வருண தர்மம்'
பன்னுதல் நம்பி ஏய்ப்போர்
      பகட்டுரைக் கடிமை யானீர்
இந்நிலை தெளியா தின்னும்
      இருட்டினில் உழலு கின்றீர்

கதிரவன் தோன்றக் கண்டும்
      கண்களை மூடிக் கொண்டீர்
மதியொளி பரவல் கண்டும்
      மயக்கினை விட்டீ ரல்லீர்
புதியதோ ருலக மிங்குப்
      பூப்பது காணீ ராகி
முதுகினை வளைத்துக் கொண்டீர்
      முப்புரி நிமிர விட்டீர்.

28.3.1984