36. ஆணா? பெண்ணா? உரைநடை என்பதோர் உரம்பெறும் ஆண்மகன்; கவிநடை என்பது கண்கவர் பெண்மகள்; கற்பனை என்னும் பொற்புறு சீலையால் ஒப்பனை செயினும் உரைநடை என்னும் ஆண்மகன் பெண்மகள் ஆதல் ஒல்லுமோ? காண்பவர் அன்றோ கைகொட்டிச் சிரிப்பர்; உடுத்திய சீலை ஒன்றால் மட்டும் அடுத்தோர் பெண்ணென் றறைதல் செய்யார்; பருவ மகளெனப் பாருக் குணர்த்த உருவ அமைப்புடன் உறுப்பெழில் வனப்பும் பெறுதல் வேண்டும்; பெண்மையும் வேண்டும்; பேசுமிவ் வொன்றும் பெறாஅ திருந்தும் ஆசைமீ தூர ஆணைப் பெண்ணெனப் பேசுதல் ஒழிக; பித்தம் தவிர்க; புதுமை எனவும் புரட்சி எனவும் எதையுஞ் செய்தல் இழிவினும் இழிவே. 5.12.1980 |