பக்கம் எண் :

76கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

39. கற்றோரை வேண்டுகிறேன்

அறிவியல் கற்று வந்தீர்
      அளவிலா உவகை கொண்டேன்;
பொறியியல் தேர்ந்து வந்தீர்
      பூரித்து மகிழ்வு பெற்றேன்;
பொருளியல் துறையில் தேர்ந்தீர்
      புகழ்ந்தனர் அயல்நாட் டாரும்;
இருளினில் மூழ்கி நின்ற
      இனத்திலோர் ஒளியைக் கண்டேன்.

மருத்துவத் துறையுங் கற்றீர்
      மருந்தியல் நெறியும் பெற்றீர்
பெருத்தநும் அறிவால் நாட்டில்
      பெரும்புகழ் குவித்தீர் மேலும்
*அருத்தியால் உம்மை வேண்டி
      அழைத்தனர் வெளிநாட் டாரும்;
கருத்தினுள் எழுச்சி கொண்டேன்
      காய்நிலஞ் செழித்த தென்றே!

உயிரியல் தோய்ந்து கற்றீர்
      உடலியல் ஆய்ந்து கற்றீர்
பயிரியல் செழிக்கக் கற்றீர்
      பலவகை நிலநூல் என்னும்
*அயிரியல் அதுவும் கற்றீர்
      ஆதலின் உலகம் போற்றும்
பயன்பல விளையும் என்றே
      பகலெலாம் கனவு கண்டேன்


*அருத்தி - அன்பு *அயிரியல் - நுண்ணியல்