பக்கம் எண் :

தாய்மொழிக் காப்போம்77

வேதியல் என்று கூறும்
      வியத்தகு நூலுங் கற்றீர்
ஓதிய பூதம் ஐந்தை
      உணர்த்திடும் இயல்கள் கற்றீர்
மூதுணர் வுடையார் சொன்ன
      மொழியியல் பலவுங் கற்றீர்
ஆதலின் நிமிர்ந்து நின்றேன்
      அருந்தமிழ் தழைக்கு மென்றே.

கற்ற அத் துறைகள் யாவும்
      கருத்தினில் தேக்கி வைத்துப்
பெற்றநம் தாய்மொ ழிக்குள்
      பிறமொழிக் கலைக ளெல்லாம்
முற்றிய வளர்ச்சி காணும்
      முயற்சியில் யாது செய்தீர்?
பற்றினை எங்கோ வைத்துப்
      பதவிக்கே நெஞ்சை வைத்தீர்

இனத்திலே ஒளியைக் கண்டேன்
      இருநிலஞ் செழிக்கக் காணேன்;
மனத்துளே கனவு கண்டேன்
      வாழ்விலே பலிக்கக் காணேன்;
முனைப்புடன் நிமிர்ந்து நின்றேன்;
      முகங்கவிழ் நிலையைத் தந்தீர்;
நினைத்துநீர் முனைந்தெ ழுந்தால்
      நெடும்புகழ் வாகை கொள்வீர்.

இன்னுமோ அடிமை நீங்கள்?
      இன்றுநீர் உரிமை மாந்தர்;
பன்னிலை அறிவா இல்லை?
      பரிவுதான் நெஞ்சில் இல்லை;
பன்னருங் கலைகள் யாவும்
      பைந்தமிழ் அடையச் செய்வீர்!
நன்னிலை தமிழுக் காக்க
      நயந்துநான் வேண்டு கின்றேன்.