பக்கம் எண் :

தாய்மொழிக் காப்போம்79

தமிழுக் குயர்நிலை தரல்அதன் கடமை;
பட்டயம் எனுமொரு பழம்பெயர் மாற்றிப்
பட்டம் என்றொரு சட்டம் செய்தால்
உலகம் குப்புற உருண்டா வீழும்?
அலைகடல் பொங்கி ஆர்த்தா சீறும்?
பட்டமென் றாக்கிடின் பலப்பல சிக்கல்
பொட்டெனப் போகும்; போற்றிடுந் தமிழகம்;
அரசு கட்டில் அமர்ந்தினி தாளும்
கலைஞர் நாவலர் கருதுவீ ராயின்
இலையொரு தடையும் எம்தமிழ் மொழிக்கே;
இன்றுள அரசு நன்றிது செயாவிடின்
என்றுதான் விடியும் எந்தமிழ் வாழ்வு?
தம்மை யீன்ற தாய்த்திரு நாட்டைச்
செம்மைத் தமிழால் செப்பிட மறுத்தவர்
பழிக்கவும் இழிக்கவும் பட்டனர் அன்றோ?
மொழிக்குயர்ஆக்கம் முனைந்து தராவிடின்
நாளைய உலகம் நம்மையும் பழிக்கும்;
வேளை யிதுதான் விரைந்திது புரிக!
செய்யத் தகுவ செய்யாவிடினும்
எய்துவ தியாதெனத் தெரிந்து செயல்செயும்
நுண்மாண் நுழைபுலம் உடையீர்
நண்பால் வேண்டுதும் நலம்தமிழ் பெறவே.

30.11.1974


(கலைஞர், நாவலர் - கலைஞர் மு. கருணாநிதியும், நாவலர்.இரா. நெடுஞ்செழியனும்)