42. உளங்கவர் புலவர் கண்ணுக்கு விருந்தாகும் இயற்கைக் காட்சி காளையரும் கன்னியரும் விழைந்து தங்கள் கண்ணுக்கு முதன்மைதரும் காதற் காட்சி கருவிழியை விழித்திமையார் முகத்தும் மார்பும் புண்ணுக்கு விழைந்திருக்கும் வீரக் காட்சி புலவருக்குப் புரவலரும் பணிந்து நின்று பண்ணுக்கு விழைந்திருக்கும் காட்சி எல்லாம் பாடிவைத்த சங்கத்தார் கவர்ந்தார் நெஞ்சை அகச்சமையம் புறச்சமையம் என்று கூறி. அளப்பரிய சமையங்கள் படைத்து நின்று, பகைக்குணமே கொண்டுழன்ற மாந்த ருக்குப் பகவனென ஒருபொருளை உணர்த்திப் பாவில் மிகச்சிறிய குறட்பாட்டால் அறத்துப் பாலும் மேன்மைபெறும் பொருட்பாலும் இன்பப் பாலும் தொகுத்தறங்கள் உரைத்தவன்யார்? அவனே யன்றோ தொன்னாள்தொட் டுளங்கவர்ந்த கவிஞன் ஆவன்; கற்புடைய மாதர்தமை உலகம் போற்றக் கலைக்கோயில் எழுப்பியருள் சேரன், நல்ல பொற்புடைய அறச்செல்வி பசிநோய் நீக்கப் பூண்டிருந்த தொண்டுளத்தை விளக்கும் வண்ணம் சொற்புதுமை காட்டியொரு நூல ளித்த தொல்புதல்வன் மதுரைநகர் வாழும் சாத்தன், பற்பலவாம் மணம்புணர்ந்த சீவ கற்குப் பாமாலை தொடுத்ததிருத் தக்க தேவன். |