82 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
தமிழ் மொழியின் சொற்களெலாம் முன்னே நின்று தவம்புரிந்தே இடம்பெறுவான் முந்தி நிற்க அமிழ்தனைய பாடலுக்குள் வரிசைநல்கி அவைதமக்கு மாற்றுயர்ந்த அணிகள் நல்கித் தமியனெனச் சொற்சிலம்பம் ஆடுங் கம்பன், தரணியிலோர் நிகரில்லாப் பரணி பாடி நமையெல்லாம் மயக்குறுத்தும் வீர மூட்டி நாப்பறையால் போர்ப்பறைகள் ஆர்த்த நல்லோன். பொன்விளைந்த களத்தூரன் வெண்பாப் பாடிப் புகழேந்தும் ஒருகவிஞன் தமிழுக் காக்கம் முன்விழைந்து நூல்செய்து காலங்கண்ட முத்தமிழ்க்குத் தொண்டுசெயும் கவிஞ ரெல்லாம் என்விழைவுக் கிலக்கானோர்; அவர்தம் பாட்டின் இனிமைக்கும் தனிமைக்கும் அடிமை யானேன்; இன்பளைந்த அவர்திறத்தை நுவலக் கேட்பின் என்பெல்லாம் நெக்குருக மகிழும் உள்ளம். மாசகன்ற வீணையென வெம்மை நீக்க மாலைவரும் மதியமென, உளஞ்சி லிர்க்க வீசுகின்ற தென்றலென, உயிர்கள் வேட்கும் வீங்கிளமை வேனிலென, மலரில் வண்டு மூசுகின்ற பொய்கையென உவமை சொல்லி முழுமுதலை விளக்கிநின்ற நாவின் வேந்தன் பேசுகின்ற தமிழ்ப்பாட்டால் இறையைக் காட்டும் பெரும்புலவன் கவராத உள்ளமுண்டோ? |