பக்கம் எண் :

84கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

எளிமைக்குப் பிறப்பிடமாய், இனிய சொல்லின்
      இருப்பிடமாய் ஆசையிலா மனத்த னாகி,
ஒளிமிக்க புத்தனுக்கும் பார சீக
      உமருக்கும் புகழோங்கும் வண்ணம் செய்த
களிமிகுத்த பாவலனாய்ச், சிறுவர் உள்ளம்
      கனிவிக்கும் கவிமணியாய், உண்மை நேர்மை
தெளிவிக்கும் ஓருருவாய் வாழ்ந்த எங்கள்
      தென்புலத்தான் திருவடியை நெஞ்சிற் கொள்வேன்.

எத்துணைதான் இடுக்கண்கள் நேர்ந்த போதும்
      எதிர்த்தெழுந்து நகைத்துநின்று வெற்றி கண்ட
முத்தமிழ்க்குப் புகழ்படைத்த புலவர் பல்லோர்
      முன்னாளில் வாழ்ந்திருந்தார்; என்றன் உள்ளம்
நத்துகின்ற புலவர்சிலர் பெயரை இன்று
      நாம்நினைதல் நலம்பயக்கும்; நினைந்து வாழ்த்தும்
அத்திறத்தால் தமிழ்காக்கும் எண்ணம் நெஞ்சில்
      அரும்புவிடும்; மலராகும்; மணம்ப ரப்பும்.

கவியரங்கம்
குன்றக்குடி
16.1.1965