86 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
44. புரட்சிப் பாவலன் ஒப்பரிய யாப்பென்னும் அணையைக் கட்டி உணர்ச்சியெனும் பெரும்புனலைத் தேக்கி வைத்தான்; அப்புனலுள் மூழ்கியதன் ஆழங் காணல் அரிதெனினும் கரையோரம் நின்று கொண்டு செப்புகின்றேன் சிலமொழிகள்; புதிய பாங்கில் செய்தமைத்த பாட்டுக்குள் வெறியை ஏற்றும் அப்பனவன் பரம்பரையில் நானோர் பிள்ளை ஆதலினால் அவன்பெருமை பாடு கின்றேன். பாவேந்தன் தீப்பிழம்பின் வெம்மை சேர்த்துப் படைத்தளித்த தீந்தமிழின் உணர்ச்சிப் பாட்டை நாவேந்திப் பாடிவிடின் உடலி லுள்ள நரம்பனைத்தும் முறுக்கேறும்; மொழிக ளெல்லாம் *ஏவேந்திப் போர்தொடுக்கும்; விழிக ளெல்லாம் எரிகக்கும்; தோள்விம்மும்; போரில் எந்தக் கோவேந்தன் வந்தாலும் எதிர்த்து நிற்கக் கொடுங்கோலைப் புறங்காண உணர்ச்சி நல்கும் விழுதுவிட்ட ஆலமரம் சாதி என்றால் வேர்பறியச் சாய்ந்துவிழச் செய்த பாட்டு; பழுதுபட்ட கண்மூடிக் கொள்கை என்னும் பழங்கோட்டை சரிந்துவிழச் செய்த பாட்டு; தொழுதுகெட்ட தமிழினத்தார் நிமிர்ந்து நிற்கத் துணிவுதனை உணர்ச்சிதனைத் தந்த பாட்டு; பொழுதுபட்டுப் போனாலும் உணர்ச்சி பட்டுப் போகாமல் நிலைத்திருக்கும் புலவன் பாட்டு.
*ஏவேந்தி - அம்பேந்தி |