பக்கம் எண் :

தாய்மொழிக் காப்போம்87

தமிழ்மொழியைத் தமிழ்மகனைப் பழித்து ரைக்கும்
      தருக்குடையார் முதுகெலும்பை நொறுக்கிக் காட்டும்
அமிழ்தனைய பாட்டுரைத்தான்; சினந்தெ ழுங்கால்
      அன்னைவந்து தடுத்தாலும் விடவே மாட்டேன்
நிமிர்ந்தெழுந்து போர்தொடுப்பேன் எனவெ குண்டு,
      நினைத்தாலும் மெய்சிலிர்க்கும் பாட்டு ரைத்தான்;
இமைகுவியா வீரத்தை எடுத்துக் காட்டி
      எக்களிக்கும் போர்ப்பாட்டை நமக்க ளித்தான்.

இருட்டறையில் உள்ளதடா உலகம் என்றான்;
      இனிவுலகம் விழித்தெழவே அவ்விருட்டை
வெருட்டுகிற வழிசொன்னான்; ஒளியுந் தந்தான்;
      விளக்கெடுத்து வெளிச்சத்தால் உலகைக் காணத்
தெருட்டுகிற பாட்டுரைத்தான்; அந்தப் பாட்டைத்
      தெளிந்துணர மனமின்றிப் பாட்டிற் காணும்
கருத்தெடுத்துப் பரப்புதற்கு முயற்சி யின்றிக்
      கண்மூடித் துயில்கின்றோம் உணர்வே இன்றி.

மழைபெய்தும் விளைவறியாக் களிமண் ணாக
      வன்பாறை நிலமாகக் கிடக்கின் றோம்நாம்;
கழைபெய்த சாறிருந்தும் அதனை மாந்திக்
      களிக்காமல் எதைஎதையோ பருகு கின்றோம்;
விழைவெல்லாம், பாவேந்தன் எண்ண மெல்லாம்
      வெறுங்கனவாய்ப் பகற்கனவாய்ப் போவ தென்றால்
நுழைமதியன் பாவேந்தன் தனது நெஞ்சம்
      நொந்தழிந்து போகானோ? நன்றே சொல்வீர்.