பக்கம் எண் :

88கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

பாரதிக்குத் தாசன்தான் எனினும் அந்தப்
      பாவலனை விஞ்சிநிற்கும் பாட்டு வேந்தன்
காருதிர்க்கும் மழைபோலப் பொழிந்த பாட்டுக்
      கற்பனைக்கு நிகரேது? பாடல் தந்த
சாறெடுத்துக் குடித்தவர்தாம் உண்மை காண்பர்;
      சாற்றிடுவர் அவனுலகப் புலவன் என்றே;
வேறெடுத்துக் குடித்தவரோ புழுதி வாரி
      வீசிடுவர் மயங்கிமிகத் தூற்றி நிற்பர்.

வங்கத்திற் பிறந்திருப்பின், இலக்கி யத்தை
      வளர்த்து வருங் கேரளத்திற் பிறந்திருப்பின்;
எங்கட்குத் தலைவனவன் மேலை நாட்டில்
      எங்கேனும் பிறந்திருப்பின் அங்கு வாழ்வோர்
சிங்கத்தை நிகர்கவிஞன் புகழைப் போற்றிச்
      சிறப்பனைத்தும் உலகெங்கும் செப்பிச் செப்பிப்
பொங்கித்தம் உளங்களிப்பர்; தன்னே ரில்லாப்
      புலவனிவன் தமிழ்நாட்டிற் பிறந்து விட்டான்.

ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டின் வரிக ளெல்லாம்
      அணிவகுத்து நிற்கின்ற படையின் கூட்டம்;
சீர்ப்பாட்டைத் தொட்டதொட்ட இடத்தி லெல்லாம்
      சீறியெழும் உணர்ச்சியைத்தான் காணல் கூடும்;
வேர்ப்பாட்டாம் அவன்பாட்டு விளைத்தி ருக்கும்
      வீரமிகும் உணர்ச்சிக்குக் குறைவே யில்லை;
சாப்பாட்டுக் கலைந்துவரும் நம்மி டந்தான்
      சற்றேனும் உணர்ச்சியிலை மான மில்லை.