88 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
பாரதிக்குத் தாசன்தான் எனினும் அந்தப் பாவலனை விஞ்சிநிற்கும் பாட்டு வேந்தன் காருதிர்க்கும் மழைபோலப் பொழிந்த பாட்டுக் கற்பனைக்கு நிகரேது? பாடல் தந்த சாறெடுத்துக் குடித்தவர்தாம் உண்மை காண்பர்; சாற்றிடுவர் அவனுலகப் புலவன் என்றே; வேறெடுத்துக் குடித்தவரோ புழுதி வாரி வீசிடுவர் மயங்கிமிகத் தூற்றி நிற்பர். வங்கத்திற் பிறந்திருப்பின், இலக்கி யத்தை வளர்த்து வருங் கேரளத்திற் பிறந்திருப்பின்; எங்கட்குத் தலைவனவன் மேலை நாட்டில் எங்கேனும் பிறந்திருப்பின் அங்கு வாழ்வோர் சிங்கத்தை நிகர்கவிஞன் புகழைப் போற்றிச் சிறப்பனைத்தும் உலகெங்கும் செப்பிச் செப்பிப் பொங்கித்தம் உளங்களிப்பர்; தன்னே ரில்லாப் புலவனிவன் தமிழ்நாட்டிற் பிறந்து விட்டான். ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டின் வரிக ளெல்லாம் அணிவகுத்து நிற்கின்ற படையின் கூட்டம்; சீர்ப்பாட்டைத் தொட்டதொட்ட இடத்தி லெல்லாம் சீறியெழும் உணர்ச்சியைத்தான் காணல் கூடும்; வேர்ப்பாட்டாம் அவன்பாட்டு விளைத்தி ருக்கும் வீரமிகும் உணர்ச்சிக்குக் குறைவே யில்லை; சாப்பாட்டுக் கலைந்துவரும் நம்மி டந்தான் சற்றேனும் உணர்ச்சியிலை மான மில்லை. |