90 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
45. ஞாயிறு போற்றுதும் தென்பால் உளது, தேன்வளர் சாரல் மென்கால் உலவும் திண்கால் ஆரம் குதிதரும் அருவி மருவிய மாமலை மதியந் தவழும் பொதியம் ஒன்று; வடபால் உளது, வானுயர் கொடுமுடி தொடருங் கருமுகில் படருஞ் சாரல் உறைதருந் தண்பனி நிறைதரும் மாமலை பரிதியை மறைக்கும் பனிமலை ஒன்று; பெருமலை இரண்டும் ஒருமலை யாக்கக் கருதிய ஒருசிலர் உறைபனி கொணர்ந்து தென்றல் தவழும் குன்றின் தலையில் அன்றவர் வைத்தனர்; அடடா என்றனர்; பனியால் நடுக்குறும் பயனே கண்டனம்; இனிய தென்றலும் எழில்நலங் குறைந்தது; விடுத்தஅப் பனிதான் விரைந்திவண் விலக நடுக்கிய பனியின் நலிவும் அகல ஒரு நூற்றாண்டின் முன்னர் ஒருநாள் மறைமலை என்னும் மறுபெயர் பூண்டு கடலலை மோதும் கரைபெறும் மூதூர் இடமகல் நாகை எனும்பெயர்ப் பட்டினத் தெழுந்ததோர் ஞாயிறு கரைந்தது வெண்பனி; தொழுதனர் மாந்தர் தோன்றுசெங் கதிரை;
மென்கால் - தென்றல், ஆரம் - சந்தனமரம் |