பக்கம் எண் :

98கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

நின்றுமனம் ஏங்கி நிலைகலங்கச் செய்கின்றோம்;
பாட்டரங்கிற் சென்றிருந்தால் பைந்தமிழ் கேட்பதிலை
கூட்டுமொழிப் பாடல்களே கோலோச்சக் காண்கின்றோம்;
எங்கெங்கு நோக்கினும் இங்கே புகுந்தமொழி
அங்கங்கே ஆட்சிசெய் தார்ப்பரிக்கக் காண்கின்றோம்;
செம்மை யுறுமொழிக்குச் சீரில்லை பேரில்லை;
செம்மை யுறாமொழிக்குச் சீருண்டு பேருண்டு;
பாலறியாப் பச்சைப் பகட்டு மொழிதனக்குக்
கோலுரிமை ஈயுங் கொடுமை நிலைகண்டோம்;
தாரமெனுஞ் சொல்லைத் தயங்காமல் ஆண்பாலாக்
கூறும் மொழியுண்டு; கொங்கை எனுமொழியை
ஆண்பா லெனவுரைக்க அஞ்சா மொழியுண்டிங்
காண்பா வனென் றறிய வுணர்த்துகிற
மீசை எனுஞ்சொல்லை மேதினியிற் பெண்பாலென்
றாசையுடன் பேசும் அழகு மொழியுண்டு;
செம்மை ஒருசிறிதுஞ் சேராச் சிறுமொழிக்கு
அம்ம எனவியக்க ஆக்கம் பலவுண்டு;
பண்டே திருந்தியநற் பண்புடனே சீர்த்தியையும்
கொண்டே இயங்கிவரும் குற்றமற நின்றொளிரும்
தூய்மொழியாம் தாய்மொழியைத் தொன்மைத் தனிமொழியைச்
சேய்மையில் தள்ளிவிட்ட சேயாகி நிற்கின்றோம்;
நற்றவத்தால் நம்நாடு நல்லோர்தம் கையகத்தே
உற்றமையால் அன்னை உறுதுயரம் நீங்குமினி;
எங்கெங்குந் தாய்மொழிக் கேற்றம் மிகக்காண்போம்
இங்கினிநம் செந்தமிழ்க்கோர் ஏறுமுகம் ஈதுறுதி
எங்குந் தமிழாகும் எல்லாந் தமிழாகும்
பொங்கும் இனிமேற் பொலிந்து.

(கவியரங்கம் - தருமபுரம் திருமடம்,
13.05.1968)