பக்கம் எண் :

10கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

நாயகன் நானென்று நானிலத்து மாந்தரெல்லாம்
வாய்நிறையப் பாராட்டி வாழ்த்தி மகிழ்வார்கள்;
உள்ளத் தெளிவுடனே ஒட்டிவரும் நல்லவர்பால்
பிள்ளைத் தமிழ்மொழியாற் பேசி மகிழ்ந்திருப்பேன்;
என்கொற்றம் போற்றாமல் எள்ளி வருவாரேல்
பின்பற்றுஞ் செம்மாப்பு பீடுபெற நானிற்பேன்;
தாழ்வுதர எண்ணித் தருக்குடையார் சூழ்ந்துவரின்
வாழ்வு பெரிதன்று, வளையா பதியாவேன்;
கள்ளத் தனத்தாற் கயமை புரிவாரின்
பிள்ளைத் தனத்தைப் பிறழும் மயக்கத்தைப்
போக்கக் கடுகம் புகட்டி, நாலடியில்
காக்குமுயர் நன்னெறியைக் காட்டி, உயர்திணையாய்
நல்வழியில் நாளும் நடந்திடுக என்றுசொலி
அல்வழியை விட்டேக ஆற்றுப் படுத்திடுவேன்;
வேற்றுமைக்கு வித்திட்டு வீண்குழப்பஞ் செய்வாரேல்
கூற்றுக் கிரையாக்கக் கூராய்தம் ஒன்றுடையேன்;
மெய்யை ஒழித்துவிட்டு மேவுமுயிர் வேறாகச்
செய்யுந் தனிநிலைமை சேர்ந்திலங்கும் ஆயுதமாம்;
வாள்பிடித்து முன்செல்வேன் வால்பிடித்துப் பின்செல்லேன்
கோள்பிடிக்க அஞ்சிடுவேன் கோல்பிடிக்க அஞ்சுகிலேன்;
தாள்பற்றி நின்றறியேன் தக்க கவியெழுதத்
தாள்பற்றி நிற்பதுண்டு; தன்மான நெஞ்சுண்டு;
சுற்றிப் பகைவருமேல் சூழ்ந்ததனைத் தூளாக்க
வெற்றிவேற் கையுடையேன்; வீரமிக்க என்தோளில்
சிந்தா மணிமாலை சேர்த்து மகிழ்விக்க
முந்தி எழில்குலுங்க முன்னிற்பாள் வெற்றிமகள்;
என்றன் தனிப்பாடல் எல்லாங் குடிமக்கள்
என்றுங் குறையின்றி ஏற்றமுற வைத்திருப்பேன்