பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்9

வான்மழைதான் பொய்க்க வருந்தும் உயிர்கண்டு
நான்மனத்தில் அஞ்சி நலிவதனால், என்னாட்டு
மக்கள் நலங்காக்கும் மாகவலை நாடோறும்
மிக்கு வருவதனால், மிஞ்சிவரும் பஞ்சத்தில்
தள்ளிவிடு மோஎன்ற தாங்காத் துயரத்தால்
வெள்ளிமுடி சூடி வெளிவருவேன் துன்பகற்ற;
என்னாட்டில் மாற்றார்க் கிடமில்லை என்றாக்கித்
தன்னாட்சி பெற்றதெனச் சாற்றுமொரு பூங்கொடிதான்
பட்டொளி வீசிப் பறந்து சிறந்திருக்கக்
கட்டி யமைத்தஒரு காவியத்துக் கோட்டைக்குள்
கற்பனை யாலியற்றிக் காட்டும் அரியணையில்
பொற்புடன் வீற்றிருந்து பூமி தனையாள்வேன்;
கட்டிக் களித்திருக்குங் காவியப் பாவையவள்
பட்டத் தரசியெனப் பக்கத் தமர்ந்திருப்பாள்;
பேராயம் எட்டென்று பேசும் அரசியலில்
சீராய எண்தொகையே பேராயம் என்னாட்டில்;
ஐந்து பெருங்குழுவும் ஆள்பவர்க்கு வேண்டுமென்பர்;
ஐந்துபெருங் காப்பியங்கள் அக்குழுவால் நின்றிலங்கும்;
யானையொடு தேர்குதிரை காலாள் எனும்படைகள்
மோனையொடு நல்லெதுகை முற்றிவரும் நாற்பாவாம்;
வில்லென்றும் வாளென்றும் வேலென்றும் பல்வகையாச்
சொல்கின்ற போர்க் கருவி சுற்றியுள பாவினங்கள்;
போரில் படையெடுத்துப் போற்றாது வந்தாரை
நேரிற் புறங்கண்டு நெஞ்சம் நிமிர்ந்திருப்பேன்;
வாள்வீரங் காட்டி வருவார் எவரெனினும்
தோள்வீரங் காட்டுந் துணிவுடையேன்; என் புகழைக்
கூறும் பரணி கொளவில்லை என்றாலும்
வீறு பெறவிளங்கும் வீரஞ்சேர் காவியத்தின்