பக்கம் எண் :

8கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

2
குறள்நெறிக் கொற்றம்

நல்ல குறிக்கோளை நாட்டிற் பரப்புதற்கு
வல்லார் அமைத்து வளர்க்குந் குறட்கழகத்
தேரை இழுத்துவரும் தீரம் மிகு செயலர்
நேரில் எனையணுகி நெஞ்சைக் குளிர்வித்துக்
கோனாட்சி வேண்டிக் குறள்நெறிசேர் கொற்றத்தால்
நானாட்சி செய்ய நயந்தென்னை வேண்டிநின்றார்;
ஆண்டறியேன் என்றாலும் யானுற்ற ஆண்டறிவேன்
ஈண்டதனால் ஓலக்கம் ஏற மனங்கொண்டேன்;
பேரால் முடியரசன் பேரிடர்கள் உற்றாலும்
பேரா முடியரசன் பெற்றுவந்தேன் கொற்றத்தை;
நாட்டரசன் நானல்லேன் என்றாலும் நான்குவகைப்
பாட்டரசர் என்னும் பரம்பரையில் வந்தவன்யான்;
வள்ளுவனார் சொல்லிவைத்த வாழ்வுக் குறள்நெறியில்
எள்ளளவுங் கோடா தொழுகிவருங் கொற்றவன்யான்;
பாட்டால் உலகாளும் பாவலர்தம் நெஞ்சத்து
வீட்டில் கொலுவிருக்கும் வெற்றித் திருமகளைப்
பொங்கிவரு மன்பால் புகழ்ந்தேத்தும் என்தலையில்
தங்கமுடி பூண்டு, தனியாட்சி செய்பவன்யான்;
தாங்குங் கவிமுடிதான் சான்றோர் மரபுணர்ந்து
பாங்கோ டணிசேரப் பண்ணி முடித்தமுடி;
ஒட்டார்பின் செல்லா உரமென்னும் வைரத்தைப்
பட்டாங் கறிந்து பதித்தமைத்த நன்முடியாம்;