8 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
2 குறள்நெறிக் கொற்றம் நல்ல குறிக்கோளை நாட்டிற் பரப்புதற்கு வல்லார் அமைத்து வளர்க்குந் குறட்கழகத் தேரை இழுத்துவரும் தீரம் மிகு செயலர் நேரில் எனையணுகி நெஞ்சைக் குளிர்வித்துக் கோனாட்சி வேண்டிக் குறள்நெறிசேர் கொற்றத்தால் நானாட்சி செய்ய நயந்தென்னை வேண்டிநின்றார்; ஆண்டறியேன் என்றாலும் யானுற்ற ஆண்டறிவேன் ஈண்டதனால் ஓலக்கம் ஏற மனங்கொண்டேன்; பேரால் முடியரசன் பேரிடர்கள் உற்றாலும் பேரா முடியரசன் பெற்றுவந்தேன் கொற்றத்தை; நாட்டரசன் நானல்லேன் என்றாலும் நான்குவகைப் பாட்டரசர் என்னும் பரம்பரையில் வந்தவன்யான்; வள்ளுவனார் சொல்லிவைத்த வாழ்வுக் குறள்நெறியில் எள்ளளவுங் கோடா தொழுகிவருங் கொற்றவன்யான்; பாட்டால் உலகாளும் பாவலர்தம் நெஞ்சத்து வீட்டில் கொலுவிருக்கும் வெற்றித் திருமகளைப் பொங்கிவரு மன்பால் புகழ்ந்தேத்தும் என்தலையில் தங்கமுடி பூண்டு, தனியாட்சி செய்பவன்யான்; தாங்குங் கவிமுடிதான் சான்றோர் மரபுணர்ந்து பாங்கோ டணிசேரப் பண்ணி முடித்தமுடி; ஒட்டார்பின் செல்லா உரமென்னும் வைரத்தைப் பட்டாங் கறிந்து பதித்தமைத்த நன்முடியாம்; |