பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்101

32
வள்ளுவர் உலகில்...

5. ஏடுகள்

படித்தவுடன் பள்ளியறை நினைவைத் தூண்டும்
       பாழ்பட்ட புனைகதைகள், விரித்துக் கையில்
எடுத்தவுடன் நெஞ்சத்தில் கனலை மூட்டும்
       இழிவுநிலை ஓவியங்கள், திரைப் படத்தில்
நடித்துவரும் நங்கையர்தக் கவர்ச்சி காட்ட
       நழுவவிடும் ஆடையொடு நிமிர்ந்து நிற்கும்
தடித்தவர்தம் நிழற்படங்கள் இவற்றை எல்லாம்
       தாங்கிவரும் ஏடுகளை அங்குக் காணேன்.

சிற்றின்பச் சுவைசேர்க்கும் வண்ண வண்ணச்
       சிவப்புவிளக் கேடுகளும் காண வில்லை;
முற்றவுணர் மதியுடையார் வரைந்து வைத்து
       முத்தமிழின் சுவைசேர்க்கும் ஏடு கண்டேன்;
கற்றவர்தம் உள்ளத்தை நிமிர்த்துக் காட்டும்
       காப்பியங்கள் தாங்கியுள ஏடு கண்டேன்;
நற்றமிழர் உயிர்விடினும் மானம் மட்டும்
       நழுவாமற் காக்கின்ற ஏடு கண்டேன்.