102 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
33 வள்ளுவர் உலகில்... 6. நண்பர்கள் பொய்யாத மொழியான்றன் உலகில் நண்பர் புடைசூழ நான்வந்தேன்; அவர்தம் கேண்மை *எய்யாமல் வளர்மதிபோல் வளரக் கண்டேன் எனதுதமிழ் நூல்நயம்போல் இனிக்கக் கண்டேன்; மெய்யாக அகம்நகவே பழகி நிற்பார்; மேலொருகால் இடுக்கண்வரின் உடுக்கை காக்கும் கையாக வந்துதவிக் காத்து நிற்பார்; கள்ளமிலா உணர்ச்சியினால் கிழமை கொள்வார். குடிபிறந்த ஒழுக்கத்தார், பழியை அஞ்சும் கொள்கையினார், மனத்துக்கண் மாசு தீர்ந்தார்; இடித்துரைத்துத் திருத்திவரும் இயல்பு கொண்டார்; என்றேனும் நோதக்க செய்து விட்டால் வெடித்தெழுந்து சினங்கொள்ளார்; உரிமை தன்னால் விளைவறியாப் பேதமையால் நிகழ்ந்த தென்று துடைத்தெறியும் நண்பரவர்; அவர்தம் நட்பால் தோளெல்லாம் பூரித்து நிமிர்ந்து நின்றேன்.
*எய்யாமல் - இளைக்காமல், அஃதாவது குறையாமல் |