பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்111

காணத் துடிக்கின்றேன்; காளையரே முன்போலப்
பேணிச் செயல்செய்யப் பேருள்ளங் கொள்ளீரோ?
நாட்டை நினையுங்கள்! நாடாண்ட நம்மினத்தின்
பாட்டை நினையுங்கள் பைந்தமிழை எண்ணுங்கள்!
வீட்டின் தனிநலத்தைச் சற்றே விலக்கிவைத்து
நாட்டின் பொதுநலத்தை நாடுங்கள்! நாடிவிடின்
நானென்ற சொல்மறையும் நாமென்ற சொல்மலரும்;
ஏனென்றால் தொண்டுக் கிலக்கணம் ஈதேதான்;
அண்ணன் திருநாளில் அத்தலைவன் சொன்னவற்றை
எண்ணி நடந்திடவே இன்றும்மை வேண்டுகிறேன்;
நேற்றை வரலாற்றை நெஞ்சில் நிறுத்துங்கள்!
ஏற்றை நிகர்வலியீர் இன்று நடப்பதையும்
சிந்தித் தெதிர்நிறுத்திச் சீர்தூக்கி நோக்குங்கள்!
வந்த இடரெல்லாம் வாயடங்கிப் போயொழியும்;
நாளை எதிர்காலம் நன்றாக வேண்டுமென்றே
காளையருக் கிந்தக் கருத்தை மொழிகின்றேன்;
என்னைத் தவறாக எண்ணி எடைபோட்டுப்
பின்னக் கணக்கைப் பிழையாகப் போடாதீர்!
கூடாரங் கூடார மாகக் குடிபுகுந்து
சூடாத பூக்கெய்து சூடிப் பழிசுமந்து
மானந் தனையிழந்து மற்றவர்தம் தாள்பிடித்துக்
கூனல் மனத்தோனாய்க் கொள்கையை விற்றதிலை;
நேற்றொன்று கூறி நிலைநாட்டி இன்றதனை
மாற்றி யுரைக்கும் மதிசிறிதும் பெற்றதிலை;
அன்றுநான் சொன்னதையே இன்றும் மொழிகின்றேன்
என்றுமதே சொல்வேன் இனிமேலா மாறிடுவேன்?
ஏற்றுங் கொடிதான் இருவண்ணம் என்னெஞ்சில்
ஏற்றும் எழில்வண்ணம் என்றும் ஒருவண்ணம்;
கொச்சை மொழிபேசிக் கூட்டம் மிகச்சேர்த்துப்
பச்சைப் புளுகால் பலபேரை ஏமாற்றிக்