பக்கம் எண் :

112கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

கச்சேந்தும் மாதர் கலவிக் கதைகூறிப்
பச்சோந்தி போலப் பலவண்ணங் காட்டேன் நான்;
மெச்சும் மொழிபேசி மேன்மைக் கருத்துரைத்
தச்சம் சிறிதுமின்றி அல்லல் எதுவரினும்
துச்சம் எனமதித்துத் தொண்டுசெயத் தன்மானக்
கச்சைகட்டி நிற்கும் கடப்பா டுடையவன்நான்;
ஈரோட்டு வேந்தர் எடுத்த இனவெழுச்சிப்
போராட்டப் பாசறைக்குட் போய்ப்புகுந்த நாள்முதலே
நீர்க்கோல வாழ்வில் நெடிதே துயருறினும்
போர்க்கோலம் மாறவிலை புத்திடு மாறவில்லை;
கோட்டுக்குள் கோடு குதிக்கும் கவியாகி
நாட்டைக் கெடுக்கும் நயவஞ்சங் கொண்டதிலை;
கேட்டுக்குக் கேடு கிளர்ந்தெழுந்து தாக்கிடினும்
நாட்டை யுருவாக்க நாளும் நினைப்பவன் நான்;
பாடென்ன பட்டாலும் பண்பாட்டை எந்நாளும்
பாடுபட்டுக் காக்கப் பழகி நடப்பவன்நான்;
சங்கமெனுந் தோட்டத்தில் சாற்றுச் சுவைமிகுந்து
தொங்குங் கவிப்பழங்கள் துய்த்துப் பழக்கமுண்டு
யாப்பமைந்த பாடல் இயற்றித் தருவதற்குக்
கோப்பைப் பழங்கள் குடித்துப் பழகவில்லை;
சாதிச் சழக்ககலச் சாத்திரத்துச் சூழ்ச்சிகளை
மோதித் தகர்த்தெறிய முன்னேற்றம் பெற்றிலங்கக்
கட்டாயம் வேண்டும் கலப்புமணம் என்றதுண்டு
தட்டாமல் அவ்வாறே சாதி தனைத்தொலைத்தேன்;
சாதிக் கலப்பைத்தான் சாற்றி நடந்ததன்றி
ஓதும் மொழிக்கலப்பை ஓர்நாளும் சொன்னதிலை;
செந்தமிழில் வந்தமொழி சேர்ந்தால் இனிக்குமெனச்
சந்தைமொழி பேசும் சழக்கனென ஆகவில்லை;
பாட்டுத் தொழிலுடையேன் பண்பாட்டுச் செந்தமிழை
நாட்டுந் தொழிலுடையேன் நாட்டை யுருவாக்க