பக்கம் எண் :

116கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

வீட்டுக் குடும்பம்போல் வேண்டிப் பழகுகின்ற
நாட்டுக் குடும்பமென நம்கழகம் வாழ்வதற்குக்
கற்பித்த நம்ஆசான் காட்டும் நெறிநடக்க
முற்பட்டு நின்றால்நாம் முன்னேற்றம் பெற்றிடுவோம்;
முன்னேற்றம் நாம்பெற்றால் மூத்திருக்கும் இக்கிழவர்
இந்நூற்றைத் தாண்டி இனிதிருந்து வாழ்ந்திடுவார்;
தொண்ணூறு தாண்டி விடின் தொண்டுகிழம் என்றுரைப்பார்
தொண்ணூறு தாண்டிடினும் தொண்டுக் கிழவரிவர்;
இவ்வுலகை மாயமென ஏய்க்கும் மதச்சழக்கை
வெவ்வுரையால் சுட்டெரிக்கும் வெந்தழல்தான் நம்பெரியார்;
எம்மதமும் அண்டா நெருப்பிவர்தாம் என்றாலும்
அம்மா மதத்தலைவர் அண்டும் மதித்தலைவர்
திட்டப்படும் புலவர் சிந்தையது நோவாமல்
ஒட்டிப் பழகும் உரிமைத் தலைவரிவர்;
வாளெடுப்போம் நம்பகையை வாட்டிடுவோம் என்றுபல
நாளெடுத்துக் கூறிடினும் நம்பகையால் வந்தவர்க்குக்
கேடொன்றும் சூழாக் கிழவரிவர்; நெஞ்சத்தில்
சூடொன்றப் பேசிடினும் தோழமைக்குத் தந்தையிவர்;
வன்முறைகள் நாடா வலியரிவர்; தம் கருத்தைச்
சொன்முறையால் நற்புரட்சி தோற்றுவித்த வீரரிவர்;
பார்போற்றும் வண்ணம் பகுத்தறிவுக் கல்லூரிச்
சீர்போற்றி நின்றிலங்கச் செய்யும் முதல்வரிவர்;
தென்னாட்டை மீட்கத் திறல்காட்டி நம்பகைவர்
*வெந்காட்டி ஓடச்செய் வெண்தாடி வேந்தரிவர்;
இந்தி எனும்பெயரால் இங்குவரும் ஆதிக்கம்
முந்தித் தொலைத்துவிட மூட்டும் பெருநெருப்பு;
தங்கமுடி யாமல் ததும்பிவரும் சிந்தனைகள்
பொங்கி வழிகின்ற புத்தறிவுப் பேருற்று;
சாதி சமயங்கள் சாத்திரங்கள் என்றுபல
ஓதும் மடமை உடைக்கும் வெடிமருந்து;
நல்ல குடியரசும் நாடும் விடுதலையும்


**.வெந்காட்டி - புறமுதுகு காட்டி