வெல்லும் படிதந்த வீரத் தலைவரிவர்; உய்வ்வண்ணம் ஆய்ந்தறிந் தோய்வே அறியாமல் செய்யரிய செய்து பெரியார் எனவானார்; நாட்டை அடிமைக்குள் நட்டு மிடிமைக்குள் வாட்டி நமையாண்ட வஞ்சகத்து வெள்ளையரை ஓட்டுதற்குப் பாடுபட்ட ஓரியக்கம் பேரியக்கம் காட்டும் நெறிநின்று கடுஞ்சிறையுட் புக்கதெலாம் நாடறியும், அந்நாள் நலிவுற்ற ஓரினத்தைப் பீடுபெறச் செயவதற்குப் பிற்போக்கு வைக்கத்தில் காட்டிய அத்துணிவைக் கண்டவர்கள் வீரரென ஏட்டில் எழுதி எடுத்துப் புகழ்ந்தார்கள்; நாட்டிற் குழைத்தஇவர் நம்மினத்தின் மேன்மைக்குக் கேட்டார் சிலவுரிமை; கேட்டும் மறுத்ததனால் காஞ்சிபுர மாநாட்டில் கண்சிவக்கப் பேசிவிட்டு வாஞ்சைகொளும் நம்பெரியார் வந்தார் வெளியேறி; எங்கள் இனத்துரிமை ஏற்றம் பெறவந்த சிங்கம் நிகர்தலைவர் சீர்மைமிகு காஞ்சியிற்றான், ஏற்றமிகும் அண்ணா இனப்போர்ப் படைத்தலைமை ஏற்கத் தகுதியுளார் என்று தெரிந்தெடுத்தார்; நாடு பிரிவதுதான் நன்மை பயக்குமென நாடி முடிவெடுத்தார் நல்லாரூர் தன்னில் பிரிவினைக்கு வித்திட்ட பேர்பெற்ற அவ்வூரில் உரிமைக் குரல் தந்(து)- உறவுக்குக் கைதந்து தன்னாட்சி நாடுந் தலைமகனை, இந்தியத்தின் முன்னாட்சி செய்கின்ற மு.க.வைத் தந்தவரார்? மூன்று தலைமுறையை முற்போக்குத் தலைவர்தமை ஈன்று கொடுத்தவரார்? இன்னும் படைப்பவரார்? பிற்போக்குக் கொள்கைகளைப் பேரிடிபோல் தாக்கிநின்ற முற்போக்குக் கொள்கையினான், மொய்ம்புடைய ஏறனையான், பாட்டுக் குரியவனைப் பாரதியை விஞ்சிவிட்ட பாட்டுக்கு வேந்தனவன், பாரதியின் தாசன்றன் பாட்டுக்குள் வீரத்தைப் பாய்ச்சியவர் ஈரோட்டுப் |