3 தன்மானப் புத்தகத்தை மூட மாட்டோம் கேட்டதடா ஒருசெய்தி தொண்டு செய்தே கிழமான பழமொன்று விழுந்த தென்றே; போட்டதடா என்னெஞ்சில் பாராங் கல்லைப் பொழுதுபுலர் நேரத்தே அந்தச் செய்தி; கேட்டழுகை வரவில்லை எனது கண்ணில் கிறுக்குற்ற எனதுமனம் அழுத தாலே; பாட்டெழுத வரவில்லை எனது கையே பகலவனைத் தொழுதழுது புலம்ப லாலே. நெஞ்சுரத்தை மட்டுமொரு துணையாக் கொண்டு நீபட்ட பாட்டையெலாம் நினைந்த தன்றி அஞ்சலிக்கு நானெழுதும் பாட்டை என்றன் அகங்கருத முடியாமல் தவித்த தையா! வெஞ்சினத்து *மடங்கலுக்கு நிகராய் வந்த வெண்தாடி வேந்தேஎன் புலம்ப லாலே நெஞ்சுருக்கும் என்துயரப் பாட லாலே நினைகின்றேன் தொழுகின்றேன் ஐயா நின்னை. ஐயாஉன் தலைமகனை அறிஞர் செம்மல் அண்ணாவை அன்றிழந்தோம் துயரில் மூழ்கிக் **கையாறு மிகவுழந்தோம் நின்றன் பேரன் கலைஞர் தரும் ஆறுதலால் தேறி வந்தோம்; நையாமல் நையும்வணம் இங்கு நாங்கள் நாதியற்று நிற்கும்வணம் பிரிந்து விட்டாய்! ஐயா எம் ஐயாஎன் றலறு கின்றோம் யாரைக்கண் டாறுதலைப் பெறுவோம் ஐயா!
*.மடங்கள் - சிங்கம் ** கையாறு - செயலற்ற நிலை |