12 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
தென்னாட்டின் பேரறிஞர் சீர்மை பழித்தறியேன்; கூறுங் குறள்நெறியிற் கொற்றம் நடத்துதலால் ஏறும் புகழ்பரவும் என்னாட்டில் ஆற்றல்மிகும் நல்ல கலைஞருக்கு நாளும் மதிப்பளிப்பேன்; சொல்லும் புகழ்மாலை சூட்டி வரவேற்பேன்; போற்றி ஒரு நாளும் தூற்றி மறுநாளும் சாற்றேன்; கலைஞருக்குத் தக்க பரிசளிப்பேன்; அஞ்சாத நாவலர்க்கும் அண்டிவரும் பாவலர்க்கும் எஞ்சாச் சிறப்பளிப்பேன் ஏற்றம் பெறவைப்பேன்; ஒன்றிப் பழகிடுவேன் உள்ளத்தில் எந்நாளும் நின்று நிலைபெறவே நீள நினைந்திருப்பேன்; நண்பர் புடைசூழ நாளும் மகிழ்ந்திருப்பேன்; பண்பிற் சிறந்தஎன் பட்டத் தரசியையும் விட்டுப் பிரிந்திருப்பேன் வேண்டியஎன் நண்பர்தமை விட்டுப் பிரிந்தறியேன் வேளைதொறும் அந்நினைவே; மெய்யுணர்வால் என்னுளத்தில் மேவுமவர் நோதக்க செய்துவிடின் பேதைமையாற் செய்திருப்பர் என்றமைதி பெற்றிருப்பேன் மேலும் பெருங்கிழமை கொண்டதனால் மற்றதனைச் செய்திருப்பர் என்றும் மனங்கொள்வேன்; எம்மைப் பிரிக்க எவரேனும் முன்வந்து மும்மைப் பொழுதும் முயன்றாலும் செல்லாது; யாப்பதுதான் கோட்டை அரணாகச் சூழ்ந்திருக்கும் காப்பியனார் செய்ததொல் காப்பியமே ஆழ்அகழி; நண்ணார் புகமுடியா நாற்புறஞ்சூழ் கோட்டைக்கு முன்னோன் பவணந்தி முன்வாயில் செய்தமைத்தான்; மாமதியன் கைவல்லான் மாறன் எழுதிவைத்த நூன்முறையால் செய்தமைத்த நுண்மாண் நெடுங்கதவை மோதித் தகர்த்தவரும் மும்மதத்து யானைகளும் பாதிப் பொழுதில் பரிதவித்துப் பின்செல்லும்; மாற்றார் படையெடுத்து வந்தறியார் என்னாட்டுள் ஏற்ற தொடைமுடித்தே என்பால் வருவார்; |