பக்கம் எண் :

126கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

ஏறுங்கால் மேடைதனில் அம்மா அம்மா
       எனஅரற்றுங் குரல்கூடக் குகையில் சிங்கம்
சீறுங்கால் முழங்குவது போலக் கேட்கும்;
       சேர்ந்துவிட்ட முதுமையிலும் மேடை ஏறிக்
கூறுங்கால் அவர்மொழிகள் கனலைக் கக்கும்;
       கொழுந்துவிடும் சிந்தனைகள் ஒளியை வீசும்;
சேருங்கள் தமிழினத்தீர் சிந்தித் தாய்ந்து
       தெளியுங்கள் விழியுங்கள் என்பார் ஐயா.

காரோட்டும் பெருவளிபோல் உலகைப் பற்றும்
       காரிருளை ஓட்டுகிற பகல வன்போல்
ஈரோட்டில் வந்துதித்த பெரியார் தாமும்
       இனஇழிவைத் தொலைப்பதற்கு நடத்தி வந்த
போராட்டம் எத்தனையோ! அதனால் ஐயா
       புகுந்தசிறை எத்தனையோ! அறப்போர் என்றே
பாராட்டும் படிசெய்தார்; மனிதர் யாரும்
       பழுதுறவோ வன்முறையோ செய்தா ரல்லர்.

பதவிகளில் தமிழர்க்குப் பங்கு வேண்டும்
       படிப்பினிலும் அப்படியே உரிமை வேண்டும்
புதுவுலகில் பிற்பட்டோர் வாடல் நன்றோ?
       பொதுமைநிலை சரிசமங்கள் அவர்க்கும் வேண்டும்
இதுதகுதி இதுதிறமை என்று பேசி
       ஏய்ப்பவரை எதிர்த்துப்போ ராடி நின்றார்;
புதுநிலைமை வளர்பொழுதில் ஆள்வோர் மீண்டும்
       புகுத்துகிறார் தகுதிதிறம் வெட்கம் வெட்கம்.

வேதங்கள் புராணங்கள் இதிகா சங்கள்
       வேண்டாத சட்டங்கள் இவைகள் எல்லாம்
தீதுங்கள் வாழ்வுக்கென் றெடுத்துரைத்துத்
       தெளிவித்தார் அவற்றைஎலாம் தீயி லிட்டார்