பக்கம் எண் :

144கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

15
தொண்டுக்கிலக்ணங்கண்டவர்

தொண்டுக் கிலக்கணங் கண்டவர் பெரியார்
தொடர்ந்ததன் இலக்கியம் ஆகவும் உரியார்

- தொண்டு

கண்டதை ஏசியும் கல்லினை வீசியும்
கண்டவர் தாக்கினும் கொண்டது பேசித்

- தொண்டு

குளித்திடப் பன்னீர் கொடுத்திடும் செழிப்பால்
கோமான் அவரென யாவரும் அழைப்பர்
குளித்திட எனினோ முகம்மிகச் சுழிப்பார்
குளிக்குமந் நேரமும் பணியிடைக் கழிப்பார்

- தொண்டு

புகழ்ந்திடும் தோழர் போற்றின ராயினும்
பொருளென அவற்றை மதித்துளம் மயங்கார்
இகழ்ந்திடும் மாந்தர் தூற்றின ராயினும்
இருசெவி வழங்கார் எள்முனை கலங்கார்

- தொண்டு

மலர்பல தூவிய பஞ்சணை மேவிய
மதிதவழ் மாளிகைத் துயில்வளம் படைத்தார்
அலைந்திடும் ஆண்டிகள் போலதை விடுத்தே
அல்லும் பகலும் அயரா துழைத்தார்

- தொண்டு