பக்கம் எண் :

156கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

22
புரட்சித் தலைவன்

‘தாழ்ந்திருக்குந் தமிழகமே உன்னை யிங்குத்
       தாழ்வுபடச் செய்தவரார்? செய்தார் தம்மை
வீழ்ந்துபடச் செய்திடுவேன் வெற்றி கொள்வேன்
       வீரமிக்க தோளும் மீண்டும் உன்னை
வாழ்ந்திருக்கச் செய்திடுவேன் உன்னைக் காக்க
       வாழ்வெல்லாம் ஈந்திருப்பேன்’ என்று கூறி,
ஆழ்ந்ததுயில் கொண்டிருந்தோர் எழுச்சி கொள்ள
       ஆர்ப்பரித்துப் புரட்சிவழி காட்டி நின்றான்.

போர்முரசம் ஆர்த்திடுவான் முழக்கம்கேட்டுப்
       பொங்கிஎழும் மறப்புலியின் கூட்டங் காண்பான்,
‘பார்மருள உயிரெடுக்கும் மறப்போர் அன்று
       பரிந்துநும துயிர்கொடுக்கும் அறப்போர் என்பான்
ஓர்முறைதான் உயிர்போகும் போவ தென்றால்
       உமதுதிரு நாட்டுக்கே போக்கு தற்கு
யார் வருவீர்?’ என்றழைப்பான்; வந்தார் தம்மை
       அறிஞனவன் அறநெறியில அழைத்துச் செல்வான்.

கொலைக்குணத்து மாந்தரையும் வயப்ப டுத்தும்
       கூரறிவுப் பேச்சாளன், எழுத்தின் வேந்தன்,
கலைத்துறையில் நிகரில்லா நடிப்பில் வல்லான்,
       கருத்துவளங் கொழிக்கின்ற சுரங்கம் போல்வான்,
நிலைப்படுத்த அரசியலை ஆய்ந்த மேதை,
       நீள்புகழின் முகட்டுமிசை நின்ற போதும்