பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்157

தலைக்கனத்தை அவனிடத்துக் கண்ட தில்லை
       தன்னடக்க நெறிகாட்டி உயர்ந்து நின்றான்.

கிழமைமிகு பெரியாரின் கழகம் சேர்ந்து
       கிளைத்துயர உழைத்தான்பின் பிரிந்த போதும்
கழகமதை அழித்துவிடக் கருத வில்லை;
       கண்டபடி ஏசவில்லை; ஈதி ரட்டைக்
குழல்மருவு துப்பாக்கி என்றே சொன்னான்
       குணமென்னுங் குன்றேறி நின்றா னன்றோ?
அழகுமிகு முன்னேற்றக் கழகங் கண்டான்
       ஆர்ப்பரிப்புச் செய்யவில்லை பணியே செய்தான்.

உடனிருந்து வளர்ந்தோர்தாம் பிரிந்து சென்றே
       உளம்நோகப் பழித்தாலும் பழிக்க மாட்டான்;
இடுபழியே தொழிலாகக் கொண்டு வாழ்வோர்
       இன்னாமை செய்தாலும் அவர்தாம் நாண
இடனறிந்து புகழ்ந்துரைப்பான் அதனால் அந்த
       எதிரிகளும் மனந்திரிந்து மதிக்க லானார்;
கடமையினைப் புரிந்திருந்தான் கட்டுப் பாட்டைக்
       காத்திருந்தான் கண்ணியமாம் வாழ்வும் பெற்றான்.