பக்கம் எண் :

16கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

அப்பெருமை தேர்ந்துணர அவ்வழியிற் சென்றொழுக
எப்பொழுதுஞ் சிந்திக்க இங்கே திறனில்லை;
என்று நினைந்திரங்கி ஏங்கிக் கவலையினால்
ஒன்றும் புரியாமல் உள்ளந் துவண்டிருந்தேன்;
ஆங்கே எனதருகில் ஆணழகன் ஓர்மகன்தான்
தீங்கே தெரியாத தெய்வத் திருமகன்போல்
வந்து கருணையுடன் வாலறிவன் நின்றருளைச்
சிந்தும் விழியாற் சிறிதென்னை நோக்கியிதழ்ப்
புன்னகை செய்தான்; புலவனவன் புன்சிரிப்பில்
என்ன பொருளென் றுணர இயலவில்லை!
ஏளனமா? அன்றி இரக்கத்தின் காரணமா?
தாளமென உள்ளந் தவிதவித்தேன்; அம்மகனை
நோக்க நிமிர்ந்தேன் நுழைபுலத்தான் அவ்விடத்தை
நீக்கி மறைந்தான் நினைந்து.