பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்17

4
சாதிப் போர்

பிறப்பொக்கும் அனைத்துயிர்க்கும் என்று சொல்லிப்
       பேராசான் ஆண்டிரண்டா யிரங்கள் செல்ல
இறப்புக்குள் போய்விட்டான் எனநி னைந்தே
       எத்தனையோ ஆயிரங்கள் சாதி சொல்லிப்
பிறப்பிக்கும் ஆற்றலினைப் பெற்று விட்டோம்;
       பிறகெதற்கு வள்ளுவற்குத் திருநாள் ஒன்று?
சிறப்பிக்கும் நோக்கமிதா? அன்றி ஏய்க்கும்
       செயலுக்குச் சின்னமிதா? தெரிய வில்லை.

சாதியினை ஒழிக்கவெனச் சங்க நாதம்;
       சாதிக்கோர் சங்கமென எங்குங் காணும்;
வேதியனைப் பஞ்சமனைப் படைக்கும் வேதம்
       வேற்றுமையை நமக்குள்ளே இன்னும் ஓதும்;
மேதினியைப் பாழ்படுத்த வந்த சாதி
       மேலுமினி வாழ்வதுதான் என்ன நீதி?
ஓதிவருங் குறளுக்குத் திருநாள் என்றால்
       உண்மையினில் சாதியினி ஒழிதல் நன்றாம்.

இத்தனைநூ றாண்டுகளாய்ச் சாதிப் பேய்தான்
       1*இரிந்தோட வேண்டுமெனச் சொன்னோம்; ஆனால்
பித்தரைப்போல் மன்பதையை வளர்த்து வந்தோம்;
       பிழையான வளர்ப்புமுறை கொண்ட தாலே
அத்தொழுநோய் நமைவிட்டு நீங்க வில்லை;
       ஆதலினால் முறைமாற்றி வளர்க்க வேண்டும்;
உத்திமுறை மாறிவிடின் மாந்தர்க் குள்ளே
       ஒற்றுமையாம் செடிவளரும் உறவும் பூக்கும்.


* இரிந்தோட - தோற்றோட