4 சாதிப் போர் பிறப்பொக்கும் அனைத்துயிர்க்கும் என்று சொல்லிப் பேராசான் ஆண்டிரண்டா யிரங்கள் செல்ல இறப்புக்குள் போய்விட்டான் எனநி னைந்தே எத்தனையோ ஆயிரங்கள் சாதி சொல்லிப் பிறப்பிக்கும் ஆற்றலினைப் பெற்று விட்டோம்; பிறகெதற்கு வள்ளுவற்குத் திருநாள் ஒன்று? சிறப்பிக்கும் நோக்கமிதா? அன்றி ஏய்க்கும் செயலுக்குச் சின்னமிதா? தெரிய வில்லை. சாதியினை ஒழிக்கவெனச் சங்க நாதம்; சாதிக்கோர் சங்கமென எங்குங் காணும்; வேதியனைப் பஞ்சமனைப் படைக்கும் வேதம் வேற்றுமையை நமக்குள்ளே இன்னும் ஓதும்; மேதினியைப் பாழ்படுத்த வந்த சாதி மேலுமினி வாழ்வதுதான் என்ன நீதி? ஓதிவருங் குறளுக்குத் திருநாள் என்றால் உண்மையினில் சாதியினி ஒழிதல் நன்றாம். இத்தனைநூ றாண்டுகளாய்ச் சாதிப் பேய்தான் 1*இரிந்தோட வேண்டுமெனச் சொன்னோம்; ஆனால் பித்தரைப்போல் மன்பதையை வளர்த்து வந்தோம்; பிழையான வளர்ப்புமுறை கொண்ட தாலே அத்தொழுநோய் நமைவிட்டு நீங்க வில்லை; ஆதலினால் முறைமாற்றி வளர்க்க வேண்டும்; உத்திமுறை மாறிவிடின் மாந்தர்க் குள்ளே ஒற்றுமையாம் செடிவளரும் உறவும் பூக்கும்.
* இரிந்தோட - தோற்றோட |