பக்கம் எண் :

162கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

சுருள்குழலார் மயங்குதற்கு நடிக்க வில்லை
       சோர்தமிழர் மயக்கத்தை அகற்று தற்கே
அருளுடையான் நாடகங்கள் எழுதிக் காட்டி
       அழகுறவே நடிப்பதற்கும் கற்றுத் தந்தான்.

நாடாண்ட இனத்தவன் நீ! உலகில் மூத்த
       நாகரிகத் தமிழ்மொழிக்குச் சொந்தக் காரன்!
ஏடாண்ட இலக்கியநூல் ஆயி ரங்கள்
       ஈங்குண்டு சான்றாக; எடுத்துப் பார்நீ!
கேடாண்ட நரிக்குணத்தர் சூழ்ச்சி யாலே
       கீழானாய்! விழித்தெழுநீ! மானம் எங்கே?
*பேடாண்ட பிறப்பாநீ? என்று பாடம்
       கற்பித்த பேராசான் எங்கள் அண்ணன்.

சாதி என்றும் சமயமென்றும் மேல்கீழ் என்றும்
       சமனிலைகெட் டடிமையென வாழுங் காலை
ஆதியில்இங் கில்லாத கருத்தை மாய்க்க
       அறிவென்னும் படைதாங்கிப் போர்தொடுத்து,
மோதவரும் பகைஎதிர்த்து, வெற்றி கண்டு
       முன்னேற்றப் பாதைதனில் மக்கள் செல்ல
ஓதிவந்த பகுத்தறிவுப் பேச்சால் அன்பால்
       ஊட்டிவிட்ட இனவுணர்வால் எழுச்சி பெற்றோம்.


* பேடாண்ட பிறப்பு - பேடி