பக்கம் எண் :

164கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

வாகை சூடி வளர்ந்தது கழகம்;
அரியென முழங்கி எரியெனச் சொற்போர்
புரியும் வீரன் போரினில் தீரன்
உரியநம் தம்பி உழைப்பால் உயர்ந்தோன்
கருணா நிதியவன் காத்தனன் மானம்;
*கறங்கெனச் சுழலும் கழகத் தோழர்
பறந்துபறந் தாற்றிடும் அயராப் பணியினர்
துட்ட விலங்குகள் உட்புக விடாது
வட்டந் தோறும் வட்டமிட் டுலவினர்;
போர்க்களம் புகுந்தனர் புரிந்தனர் அறப்போர்;
சேர்த்தனர் வெற்றி ஆர்த்தனர் வீரர்;
சென்னை மாந்தரை முன்னணி வீரரைச்
சென்னி தாழ்த்தி வாழ்த்துவென் யானே;
அண்ணா அண்ணா வாழ்த்துக அண்ணா
‘நண்ணார் நமக்கிலை நாடுநம் குறிக்கோள்
மாநகர் நலம்பெற மாநக ராட்சியை
ஏந்துக கழகம்’ என்றுநும் நாவால்
வாழ்த்துக அண்ணா வாழ்த்துக பெரிதே.

மாநகராட்சித் தேர்தலில் கழகம் வென்ற போது பாடியது


* கறங்கு - காற்றாடி