பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்167

27
தலைவா வருக!

அகிலம் போற்றும் அறிஞனே வாவாவா
       அண்ணன் என்னும் உறவினாய் வாவாவா
பகைவர்க் கிரங்கும் பண்பினாய் வாவாவா
       பணிவும் துணிவும் நிறைந்துளாய் வாவாவா
குகையில் வாழும் சிங்கமே வாவாவா
       கொடுமை கண்டு பொங்குவாய் வாவாவா
நகைமி குந்த முகத்தினாய் வாவாவா
       நன்மை வாழும் அகத்தினாய் வாவாவா

சிறையின் மீளும் வீரனே வாவாவா
       சிந்தை வாழும் தீரனே வாவாவா
திருவி டத்தின் தலைவனே வாவாவா
       சேனை கண்டு மகிழவே வாவாவா
உரிமை காக்கும் படைஞனே வாவாவா
       உள்ளங் கவரும் கலைஞனே வாவாவா
பெருமை சேர்க்கும் நாவினாய் வாவாவா
       பேணும் நாட்டை மீட்கவே வாவாவா

அருளைப் பொழியும் விழியினாய் வாவாவா
       அறமுரைக்கும் மொழியினாய் வாவாவா
மருளொ ழிக்கும் மதியினாய் வாவாவா
       மடமை போக்கும் வலியினாய் வாவாவா
கருணை காக்கும் நெஞ்சினாய் வாவாவா
       கடமை போற்ற அஞ்சிலாய் வாவாவா
இருள்த விர்க்கும் உதயமே வாவாவா
       எதையும் தாங்கும் இதயமே வாவாவா

1962 சூலை 19-இல் அக விலை உயர்வை எதிர்த்து மறியல் செய்தமையால் சிறைப்படுத்தப்பட்டு, 24.10.62-இல் விடுதலை பெற்ற அறிஞர் அண்ணா அவர்களுக்கு வரவு கூறும் முறையில் பாடப்பட்டது.