174 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
இன்றதுதான் புரியவிலை என்றால் நாளை எளிதாகப் புரிந்துவிடும்; உங்கள் மக்கள் நன்றெனவே புரிந்திடுவர்; ஆத லால்நீர் நலங்கெடுத்துப் பிறமொழிச்சொல் கலத்தல் வேண்டா என்றுமுயர் தனிமொழியைக் குழப்பி விட்டால் இளைஞரெலாம் இகழ்வரென இடித்துக் கூறி நன்றுணரும் பேரறிஞன் தாய்மொழிக்கு நலங்காக்குங் காவலனாய் விளங்கு கின்றான். ‘சாவென்றால் ஒருமுறைதான் நம்மைச் சாரும் சாய்ந்தபினர் மறுமுறையும் உயிரை யிங்கு வாவென்றால் வாராது; போகும் அந்த வறியவுயிர் தாய்மொழியைக் காப்ப தற்கே தாவென்றால் தந்திடுவேன்; தயக்கங் கொள்ளேன் தமிழ்நாடு தனைக்காப்பேன்’ என்று ரைத்த நாவென்றான் வாய்மொழியை நினைந்து பார்க்கும் நாளெல்லாம் உடல்சிலிர்க்கும் உயிர்சி லிர்க்கும். ‘செந்தமிழ்க்குத் தீங்கென்றால் அரசி ருக்கை சிறிதெமக்குப் பெரிதன்று; தாய்மொ ழிக்கு நொந்திருக்கும் நிலைவந்தால் பொறுக்க மாட்டோம்; நொடிப் பொழுதில் துச்சமென உதறி விட்டு வந்திருப்போம் போர்தொடுப்போம் தமிழ்மொ ழிக்கு வாழ்வுதரச் சிறைபுகுதத் தயங்க கில்லோம் வெந்துயர்க்கும் அஞ்சகிலோம் வாழ்வும் சாவும் விளையாட்டென் றெண்ணிடுவோம் பகைமுடிப்போம்’. என்றெழுந்து சூளுரைத்த அண்ணா எங்கள் எழில்மொழிக்குக் காவலனாய் விளங்கக் கண்டோம் இன்றெழுந்த மொழிப்போரில் இவனை விட்டால் எமதுமொழி காப்பதற்கோர் தலைவ னில்லை; ஒன்றுணர்ந்து சொல்கின்றேன் தமிழைக் காக்க உறுகழகம் ஈதன்றி வேறொன் றில்லை; துன்றிஎழும் கழகத்தைக் காப்ப தற்கும் தூயஒரு தமிழன்றி மற்றொன் றில்லை. |