பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்175

பேரரசு, வளர்ந்துவரும் ஒற்று மைக்குப்
       பிழைசெய்ய இந்தியினைத் திணித்தால் மக்கள்
போர்முரசு கொட்டிடுவர்; குருதி சிந்தப்
       பொங்கிடுவர்; தமிழ்மாந்தர் சினந்தெ ழுந்தால்
சாரரசு சடசடெனச் சரிந்த தைப்போல்
       சாய்ந்தொழியும் ஆணவத்தார் ஆட்சி யெல்லாம்
போரரசு செயநினைத்தால் புகுந்து பார்ப்போம்
       பொன்றுவதும் யாரென்று துணிந்து பார்ப்போம்.

‘செப்புமொழி பதினெட்டுக் கொண்டாள் அன்னை
       சிந்தனைதான் ஒன்றுடையாள்’ என்று சொன்ன
ஒப்பரிய பாரதியின் மொழியைக் கூட
       ஒழிப்பதற்கோ முனைகின்றீர்? இந்தி என்று
செப்புமொழி ஒன்றாக்கி, அறிவு கெட்டுச்
       சிந்தனையைப் பலவாக்கி, வெறிய ராகித்
தப்புவினை புரிகின்றீர்! தேயம் உங்கள்
       தனியுடைமை யன்றுபொது வுடைமை யாகும்.

தாய்மொழியாம் தமிழ்மொழியே முரசம் ஆகத்
       தமிழகத்துப் பண்பாடு கவசம் ஆக
ஆய்முறைசேர் அறிவுபடைக் கலமே யாகக்
       அறநெறியே வழிகாட்டும் துணையே யாகக்
கூய்வருமோர் மொழிப்போரில் தலைமை தாங்கிக்
       கொடுமைகளைச் சாய்த்தொழிக்க எங்கள் அண்ணா
தாய்வருமோர் காவலனாய் விளங்கக் கண்டோம்
       தலைவணங்கிப் பாடுதும்யாம் வாழ்க என்றே.

அண்ணா 59-ஆவது பிறந்தநாள் விழா,
சென்னை,
17.9.1967