176 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
30 காக்குந்தொழில்வல்லான் சிந்திக்க மாட்டாமல் சீரிழந்து நிற்கின்ற முந்தைத் தமிழ்நாட்டில் மொய்த்துத் துயர்ப்படுத்தும் கண்மூடிக் கோட்பாட்டைக் கட்டோடு சுட்டெரித்து மண்மூடிப் போக மறைத்துத் தொடர்ந்திங்கு நல்ல அறிவூட்ட நாட்டை வளமாக்கத் தொல்லை இருளகற்றத் தோன்றும் சுடரிரண்டு; ஒற்றைச் சுடர்தோன்றும் ஊரதுதான் ஈரோடு மற்றைச் சுடர்தோன்றி வாழிடமோ காஞ்சிநகர்; தோன்றும் ஒருசுடர்க்குத் தொண்ணூறு மேவிவரும் ஆன்றதொரு செஞ்சுடர்க் காறுபத்து தாவிவரும்; ஈரோட்டில் தோன்றுசுடர் எந்நாளும் ஒய்வின்றிப் போராட்டஞ் செய்துவரும் பொன்றா நெருப்பாகும்; காஞ்சிச் சுடரோ கனலாது காய்ந்துமன வாஞ்சைக் கதிரால் வளர்ந்துவரும் ஞாயிறது; ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் போற்றுதும்; மாயிரு ஞாலம் வளமுடன் வாழ்ந்திட ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்; எண்ணும் மனத்தில் இனித்திருக்கும் நல்லவனாம் அண்ணன் புகழ்சொல்ல ஆயிரம் நாவேண்டும்; பொன்றாப் புகழ்மணக்கும் புண்ணியன் நற்குணங்கள்; ஒன்றா இரண்டா ஒருபொழுதில் பாடுதற்கு? |