தோற்றுவித்த கட்சி துவளாமல் காத்துவந்த ஆற்றலுக்கு நேர்சொல்ல ஆளொருவர் ஈங்கில்லை; ‘காளையரைக் கொண்ட கழகம் வளர்ந்துவிடின் நாளைநிலை என்னாகும் நாடே அவர்வயமாம்’ என்றஞ்சிப் பேரரசை ஏற்றிருந்த நல்லோர்கள் அன்று தடைச்சட்டம் ஆக்கி விடுத்தார்கள்; ‘போயிற்றுப் போயிற்றுப் பூண்டோடு போயிற்று வாயற்றுப் போயிற்று வாயேது கட்சிக்’கென் றார்ப்பரித்து நின்றார் அரசியல் சோதிடர்கள்; போர்ப்பயிற்சி நன்கு புரிந்திருக்கும் நம்அண்ணன் தாக்கவந்த சட்டம் தலைதூக்க மாட்டாமல் ஆக்கிவைத்த ஆற்றல் அறிவுளார் போற்றுகின்றார்; குட்டிக் கலகங்கள் கோள்மூட்டல் அங்குமிங்கும் எட்டிப் பிடித்தே இறுகமுடி போடல்என நாளெல்லாம் ஆடிவரும் நாரதர்கள் கூடிஒரு கேளல்லார் தம்அணைப்பில் கேடு விளைத்தார்கள்; பேசா தனபேசிப் பேயாட்டம் ஆடிவந்தார் ஏசா தனவெல்லாம் ஏசி எழுதிவந்தார்; கூடிக் களிக்குங்கால் கோமான் புகழொன்றே பாடிப் பிழைத்தவர்கள், பண்பாளன் கால்களையே ஓடிப் பிடித்தவர்கள், ஊர்ஊராச் சென்றுபல சாடிப் பழித்தார்கள் சாகும் கழகமென ஆடிக் களித்தார்கள் ஆகாத கூட்டுறவைத் தேடிப் பிடித்தார்கள் தேய்பிறைபோ லானார்கள்; சட்டமென வந்த தடையாம் புறப்பகையால் எட்டுணையுங் கேடின்றி ஏற்றமிகு நம்அறிஞன் காத்த கழகததைக் காழ்ப்பு மிகுதியினால் வாய்த்த அகப்பகைதான் வாடிடச் செய்திடுமோ என்றஞ்சித் தொண்டரெலாம் ஏங்கி யிருக்குங்கால் |