பக்கம் எண் :

178கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

நன்றெண்ணிச் செய்தான் நயவஞ்சப் போக்கெல்லாம்
சென்றொழியச் செய்தான் சிறுமைப் பகையனைத்தும்
வென்றுமலர் வாகை விறல்மாலை சூடிநின்றான்;
ஆண்டுபல வாக அரசிருக்கை வீற்றிருந்தே
ஆண்டிருந்தோர் தம்மை அசைப்பதற்கு யாருமிலர்
என்ற செருக்காலே எக்காள மிட்டவர்கள்
நின்றுதடு மாறி நெடுமூச்சு வாங்கவைத்தான்;
நாகம் படர்ந்திருக்கும் நச்சுப் பெருமரத்தை
வேகப் புயலாகிவேரோடு சாய்த்து விட்டான்;
சாடும் புயலாகிச் சங்காரம் செய்த பினர்ப்
பாடுமிளந் தென்றலெனப் பாராண்டு நிற்கின்றான்;
மக்கள் நலங்காத்து மாநிலத்தார் நெஞ்சமெலாம்
புக்கிருந்து வாழ்ந்து பொலியும் உயிராகி,
மாந்தர் உயிரானால் மன்னுயி;ர்கள் அத்தனையும்
ஏந்தும் உடலாக ஈடின்றி ஆள்கின்றான்;
காக்குந் தொழில்வல்லான் காட்டும் நெறிநடத்தல்
யார்க்கும் நலமென்பேன் யான்.

29.9.1968