பக்கம் எண் :

180கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

நான்பிறந்த பொன்னாட்டை நல்லதமிழ் நாடென்று
தேன்போல் இனிக்கப்பேர் செய்தானை வாழ்த்துகின்றேன்;
என்னுள் கொலுவிருந் தேற்றம் தருபவட்குக்
கண்ணுள் கருமணிக்குக் காவியத் தாய்மொழிக்கு
மாநாடு கூட்டி மலர்சூட்டிப் பாரெல்லாம்
தான்நாடச் செய்தானைத் தாள்பணிந்து போற்றுகின்றேன்;
மற்றோர் வளர்ச்சியினால் தன்வளர்ச்சி மாறுமெனச்
சற்றேனும் எண்ணாமல் தன்னாற்றல் நம்புமவன்,
சார்ந்தாரை வாழ்வித்துத் தன்போல் வளர்த்துவிடத்
தேர்ந்தானைப் பல்லாண்டு வாழ்கவெனச் செப்புகின்றேன்;
கற்றுணர்ந்த நல்லோர்பால் காணுந் திறமையினை
உற்றுணர்ந்து போற்றிவரும் உள்ளத்தை வாழ்த்துகின்றேன்;
பேராற்றல் வாய்ந்த பேராயக் கட்சியினைப்
போராட்டத் தேர்தலிலே பொன்றிவிழச் செய்திடினும்
வெற்றிக் களிசிறிதும் வேண்டாப் பெருந்தன்மை
உற்றதொரு நற்பண்பை உள்ளூறிப் பாடுகின்றேன்;
தொண்டரெலாம் தம்பியராத் தோள்தந்து காக்குமுளம்
கொண்டொழுகும் அன்புளத்தைக் கோடிமுறைவாழ்த்துகின்றேன்;
தந்தை பெரியாரும், தந்நலத்தை நாடிகளும்
தந்த வசைமொழிகள், தாங்கும் இதயத்தை,
அண்ணன் குடும்பத்தை ஆணவத்தார் கூறிவந்த
புன்மொழிகள் யாவும் பொறுத்திருக்கும் நெஞ்சுரத்தைக்
கோடி முறைசொல்லிக் கோவில்கட்டிக் கும்பிட்டுப்
பாடி முடித்தாலும் பாட்டில் அடங்காது;
நேரு பெருமகனார் நீண்ட ஒருசொல்லைக்
கூற மனந்துணிந்தார்; கொற்றமிகு காளையர்கள்
சீறி எழுந்தார்கள்; சிந்தனையில் செந்தமிழில்
ஊறி வரும் நெஞ்சத்தான் ஒன்றுரைத்தான் தம்பியர்க்கு;